ஃபெமா வழக்கு தொடர்பாக தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வெங்கட்சாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னூர் (மஞ்சேரியல் மாவட்டம்) மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தெரிகிறது.
விவேக் வெங்கட்சாமி 8 கோடி ரூபாய் வங்கிப் பரிவர்த்தனை சமீபத்தில் செய்ததாக கூறப்படுகிறது. தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரிக்கு (CEO) முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது சோதனை செய்தது.
முன்னாள் எம்.பியான அவர் இந்த மாத துவக்கத்தில், பா.ஜ.,வில் இருந்து ராஜினாமா செய்து, ஐதராபாத்தில், ராகுல் காந்தி முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார். முன்னதாக காங்கிரஸில் இருந்த அவர், அங்கிருந்து தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சிக்கும், பின்னர் பாஜகவுக்கும் தாவினார்.
600 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பணக்கார அரசியல்வாதி விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.