சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தென்னக இரயில்வே சார்பில், காரைக்குடியில் இருந்து விருதுநகர், இராஜபாளையம் வழியாக, எர்ணாகுளத்துக்குச் சிறப்பு இரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை தினங்கள், வார விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்புத் தினங்களில் பயணிகளின் நலனுக்காக தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து செல்வது வழக்கம்.
இதனை அடுத்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக,
முதன்முறையாக காரைக்குடியில் இருந்து விருதுநகர், இராஜபாளையம் வழியாக எர்ணாகுளத்திற்குச் சிறப்பு கட்டண இரயில் இயக்கப்படுவதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
வருகிற 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 28-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.
இந்த இரயில் (வண்டி எண் – 06019) எர்ணாகுளத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1.27 மணிக்கு தென்காசிக்கும் மாலை 3.43 மணிக்கு விருதுநகர் இரயில் நிலையமும் வந்தடைகிறது. இரவு 7 மணிக்கு காரைக்குடி சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு இரயில் (வண்டி எண் – 06020) காரைக்குடியில் இருந்து நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.58 மணிக்கு விருதுநகருக்கும், விடியற்காலை 3.50 மணிக்கு தென்காசிக்கும் செல்கிறது. மறுநாள் நண்பகல் 11.40 மணிக்கு எர்ணாகுளம் இரயில் நிலையம் சென்றடைகிறது.