கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் சுமார் 250 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியது.
அந்த பகுதியில் உள்ள முரட்டு வாய்க்காலில் மழை நீர் அதிக அளவில் செல்வதால், வயலில் உள்ள தண்ணீர் வடியவில்லை. இதனால், சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. முரட்டு வடிகால் வாய்க்கால் முழுவதும் ஆகாயத் தாமரை பரவி இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
மழைக்கு முன்னரே முரட்டு வாய்க்காலில் இருந்து ஆகாயத் தாமரையை நீர்வளத்துறை அதிகாரிகள் அகற்றி இருந்தால், மழை நீரில் பயிர்கள் மூழ்கி இருக்காது என்றும்,கடன் வாங்கி விவசாயம் செய்தும், பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், தமிழக அரசின் திட்டமிடாத நடவடிக்கையால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் விவசாயிகளும், விவசாய சங்க தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கை தமிழக அரசின் காதுகளுக்கு கேட்குமா?