ராய்ப்பூர் மைதானத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக மின்சாரத்திற்கு மட்டும் ரூ.1.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.1.8 கோடி செலவு செய்திருந்தால், மின்சார கட்டணத்தைக் கட்டியிருக்க முடியும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. ராய்ப்பூர் மைதானத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து மின் கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளது.
இதனால் 5 ஆண்டுகளுக்கு முன்பே ராய்ப்பூர் மைதானத்தின் மின்சார சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாக மின்சார கட்டணம் மட்டும் ரூ.3.16 கோடி நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதால், தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் கேலரிகள் மற்றும் வேறு சில இடங்களுக்கு மட்டுமே தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் ஜெனரேட்டரை பயன்படுத்தி மட்டுமே மின் விளக்குகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பிசிசிஐ மீது பலரும் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் ராய்ப்பூர் மைதானத்திற்குத் தற்காலிக மின்சாரம் வழங்கப்பட்டதன் செலவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெனரேட்டர் மற்றும் பேக் அப் மின்சாரத்திற்காக மட்டும் ரூ.1.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதுதான் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கூடுதலாக ரூ.1.8 கோடி செலவு செய்திருந்தால், மின்சார கட்டணத்தைக் கட்டியிருக்க முடியும்.