காங்கிரஸின் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதுதான் என்று அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனவல்லா கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதேசயம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், பா.ஜ.க.விடம் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது.
இந்த நிலையில், காங்கிரஸின் தோல்விக்கு சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியதுதான் மிக முக்கியக் காரணம் என்று அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனவல்லா கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஏன் தோல்வியடைந்தது என்பதை காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
இந்தத் தோல்விக்கு மிக முக்கியக் காரணம் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியது. அதேபோல, ஓ.பி.சி. மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்துப் பேசியது மற்றொரு காரணமாகும். ஏனெனில், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் இது ஒரு காரணியாகவே இல்லை.
மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை, சிவராஜ் சிங் சௌஹான் ஒரு ஓ.பி.சி. முதல்வர். அதேபோல, முன்னாள் முதல்வர் பாபுலால் கவுர் மற்றும் உமாபாரதி ஆகியோரும் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள்தான். மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்கிற நம்பிக்கையில் இருந்த காங்கிரஸுக்கு இவை இரண்டும் கடும் போட்டியை ஏற்படுத்தி விட்டன.
78 வயதான கமல்நாத் மற்றும் 76 வயதான திக்விஜய் சிங் ஆகியோரிடம் முழுமையான கட்டுப்பாட்டை வழங்கிய காங்கிரஸிடம், பா.ஜ.க.வின் சமூக பொறியியல் மற்றும் சமூக திட்ட சூத்திரத்திற்கு பதில் இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மத்தியப் பிரதேசத் தேர்தலில் பா.ஜ.க. தனது முழு பலத்தையும் ஈடுபடுத்தியதோடு, மத்திய அமைச்சர்கள், மக்களவை எம்.பி.க்களையும் களத்தில் இறக்கி விட்டது.
அதேசமயம், காங்கிரஸ் கொடுத்த 11 உத்தரவாதங்களில் ஏராளமான இலவசங்கள் அடங்கி இருந்தன. ஆனால், இதை வாக்காளர்கள் நம்பவில்லை. அதோடு, பா.ஜ.க. ஏற்கனவே பல சமூகத் திட்டங்களின் பலனை மக்களுக்கு வழங்கியது. குறிப்பாக, லட்லி பெஹ்னா திட்டம் பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றது” என்றார்.