சென்னை மடிப்பாக்கம் ராம்நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன் வலியுறுத்தியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது. மழை நின்ற பிறகும், வெள்ளம் பாதித்த பல இடங்களில் தண்ணீா் வடியவில்லை, மின்சாரம், தண்ணீா் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக்கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மடிப்பாக்கம் ராம்நகரில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இங்கு தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என டார்லிங் 2 இயக்குநர் சதீஷ் சந்திர சேகரன் வலியுறுத்தியுள்ளார். இப்பகுதியில் இரு பம்பிங் ஸ்டேசன் உள்ளதாகவும், ஆனால் இந்த நேரத்திலும் அது செயல்படாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே ஜெனரேட்டர் மூலம் அதனை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது ராம்நகர் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அதே நிலை தற்போது தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.