அயோத்தி ஸ்ரீராமர் கோவில் அர்ச்சகர்களாக, துதேஸ்வர் வேத வித்யா பீடத்தில் படித்த காசியாபாத்தைச் சேர்ந்த மொகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது.
இதனிடையே, இக்கோவிலின் அர்ச்சகர் பணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். இவர்களில் 3,000 பேரிடம் நேர்காணல் நடந்தது. இதில், மொகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மொகித் பாண்டே, காசியாபாத்தைச் சேர்ந்தவர். இவர், அந்த நகரத்தில் உள்ள ஸ்ரீதுதேஸ்வர்நாதர் கோவிலில் செயல்படும் துதேஸ்வர் வேத வித்யா பீடத்தில் படித்தவர். தற்போது, இங்கு 70 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வட இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.