உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில், சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.
அப்போது, கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார இலக்குகளை எட்டுவதில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறோம். 2014ஆம் ஆண்டு உலகின் பெரும் பொருளாதார நாடுகள் பட்டியலில் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம் என தெரிவித்தார்.
சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பிரமிப்புடன் பார்க்கின்றன. நம் மீது பெரும் நம்பிக்கையையும் வைத்துள்ளன. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடு என்ற இலக்கை விரைவில் எட்டுவோம். அதுபோல, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், அதாவது, 417 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார நாடாக, 2025க்குள் நாம் முன்னேற உள்ளோம் என அமித் ஷா குறிப்பிட்டார்.