நாட்டில் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் 55 தளங்களில் செயல்பட்டு வருகின்றன என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் வி.கே.சிங் இன்று மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விமானிகளின் எண்ணிக்கைகளுக்கு குறைவில்லை. தற்போது, நாட்டில் 34 விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் 55 தளங்களில் செயல்பட்டு வருகின்றன. நடப்பு 2023-ம் ஆண்டில் (அக்டோபர் வரை), இதுவரை மொத்தம் 1371 வர்த்தக விமான ஓட்டும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலானதாகும்.
மேலும் அதிக எண்ணிக்கையிலான வணிக விமானிகளுக்கு பயிற்சி அளிக்க நாடு முழுவதும் அதிகளவில் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் பள்ளிகளை நிறுவ மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவற்றில் பின்வருவன அடங்கும்:
2021-ம் ஆண்டில், ஒரு போட்டி ஏல செயல்முறைக்குப் பிறகு, பெலகாவி (கர்நாடகா), ஜல்கான் (மகாராஷ்டிரா), கலபுரகி (கர்நாடகா), கஜுராஹோ (மத்தியப் பிரதேசம்), லீலாபரி (அசாம்) ஆகிய ஐந்து விமான நிலையங்களில் ஒன்பது விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் வழங்கியது.
இவற்றில் 2021, 30 ஜூன் நிலவரப்படி, நான்கு விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன: ஜல்கான், லீலாபரியில் தலா ஒன்று, கலபுரகியில் இரண்டு. இந்த பயிற்சி நிறுவனங்களில், கஜுராஹோவில் ஹெலிகாப்டர் ஓட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஜூன் 2022 இல், போட்டி ஏல செயல்முறைக்குப் பிறகு, பாவ்நகர் (குஜராத்), ஹூப்ளி (கர்நாடகா), கடப்பா (ஆந்திரா), கிஷன்கர் (ராஜஸ்தான்), சேலம் (தமிழ்நாடு) ஆகிய ஐந்து விமான நிலையங்களில் மேலும் ஆறு விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதில், சேலத்தில் ஒரு விமானம் ஓட்டும் பயிற்சி நிறுவனம் செயல்படுகிறது.