நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் ‘துரதிருஷ்டவசமானது மற்றும் கவலைக்குரியது’ என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. கடந்த 13-ம் தேதி கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் மக்களவைக்குள் குதித்து புகைக் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
அதேபோல, நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் 2 பேர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். மேற்கண்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு 4 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
அதேபோல, இத்திட்டத்துக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா என்பவர் போலீஸில் சரணடைந்த நிலையில், அவரையும் போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்த நிலையில், பிரதமர் மோடி ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மக்களவையில் நடைபெற்ற பாதுகாப்பு அத்துமீறல் ஒரு தீவிரமான விவகாரம். பாதுகாப்பு மீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரிய விஷயமாகும். இது பற்றி விவாதிக்கத் தேவையில்லை.
இனி இதுபோல் நடக்காத வகையில் தீர்வு காண வேண்டும். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு மக்களவை சபாநாயகர் உத்தரவிட்டிருக்கிறார். சதி அம்பலப்படுத்தப்படும் என்று நாங்கள் அனைவரும் நம்புகிறோம். இந்த விவகாரத்தில் புலனாய்வு அமைப்புகள் முழு விசாரணை நடத்தி வருகின்றன.
இதற்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் திட்டம் என்ன? வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க என்ன செய்து தீர்வு காண வேண்டும் என்பது குறித்து நாம் முடிவெடுக்க வேண்டும். தாக்குதலுக்கான காரணத்தை விரைவில் கண்டுபிடிப்பார்கள்” என்றார்.