அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அறிவித்திருக்கின்றன.
அஸ்ஸாம் மாநிலம் வடக்கு கச்சார் ஹில்ஸ் தன்னாட்சி கவுன்சிலின் 28 தொகுதிகளுக்கு ஜனவரி 8-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவின்போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் ஜனவரி 10-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும். தொடர்ந்து, ஜனவரி 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அஸ்ஸாம் மாநில தேர்தல் ஆணையர் அலோக் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 21-ம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விண்ணப்பங்கள் பரிசீலனை டிசம்பர் 22-ம் தேதி நடைபெறும்.
இங்கு மொத்தம் 1,41,124 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 70,485 பேர் ஆண்கள், 70,639 பேர் பெண்கள். தேர்தலை முன்னிட்டு, 280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்த வாக்குச் சாவடிகளில் 100 வாக்குச் சாவடிகள் சென்சிட்டிவ்வாகவும், 27 மிகவும் சென்சிட்டிவானதாகவும் உள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த வாக்குச் சாவடிகளுக்கு சில கூடுதல் ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். அங்கு ஒவ்வொரு முக்கிய வாக்குச் சாவடியிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் பணியமர்த்தப்படுவார். மேலும், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.