அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், “அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி இருவரும் (சங்க) குடும்பத்தில் பெரியவர்கள், அவர்களின் வயதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் அயோத்திக்கு கும்பாபிஷேகம் விழாவுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எங்கள் கோரிக்கையை இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஸ்வ இந்து பரிஷத் சார்பில் இருவரையும் இன்று நேரில் சந்தித்து அயோத்தி கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்போது விழாவில் கலந்து கொள்ள தங்களால் இயன்றவரை முயற்சி செய்வோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக விஎச்பி மூத்த தலைவர் அலோக் குமார் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராம் மந்திர் இயக்கத்தின் முன்னோடிகளான அத்வானி ஜி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஜி ஆகியோர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். அவர்கள் வருவதற்கு தங்களால் இயன்றவரை முயற்சி செய்வோம் என தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.