கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும் உணர்வோடு முன்னேற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 6 நாள் பயணமாக மேற்குவங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். முதல்நாள், மேற்குவங்க மாநிலம் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
தொடர்ந்து, கடந்த 4 தினங்களாக தெலங்கானாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற எம்.என்.ஆர். கல்வி அறக்கட்டளையின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “நல்ல கல்வி முன்னேற்றத்தின் கதவுகளைத் திறக்கிறது.
அதேபோல, நல்ல ஆரோக்கியம் ஒருவரை வாழ்க்கையில் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். ஆகவே, கிராம மக்களுக்கு கல்வி மற்றும் மருத்துவ வசதிகளில் நிறுவனங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவது அவசியம்.
உலகின் அறிவுப் பொருளாதாரத்தில் நாடு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் உள்ள தொழில்துறை, குறிப்பாக ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் திறமையான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், உலகம் முழுவதும் நாட்டின் நற்பெயருக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
எம்.என்.ஆர். அறக்கட்டளை போன்ற கல்வி நிறுவனங்கள் தாழ்த்தப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களின் கல்வி மேம்பாடு மற்றும் சுகாதார நலனுக்காக தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அனசுயா சிதக்கா மற்றும் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் எம்.என்.ராஜு, துணைத் தலைவர் ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.