பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக, நாடாளுமன்றத் தேர்தலில் இந்து பெண்ணான டாக்டர் சவீரா பிரகாஷ் போட்டியிடுகிறார்.
பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த அரசின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதியுடன் நிறைவடையவிருந்தது.
ஆனால், 3 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 9-ம் தேதியே ஷெபாஸ் ஷெரீப் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார். இதையடுத்து, வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 10 தொகுதிகளில் பிற மதத்தினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக இந்து பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பனெர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சவீரா பிரகாஷ் என்ற இந்து பெண் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
பொதுத் தொகுதிகளில் 5 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிடலாம் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, பிகே 25 என்ற பொதுத் தொகுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிட சவீரா பிரகாஷ் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
சவீரா கடந்த 2022-ம் ஆண்டு அபோதாபாத் சர்வதேச மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பட்டம் பெற்றவர். தனது படிப்பை முடித்த கையோடு அரசியல் களத்தில் நுழைந்திருக்கிறார். சவீராவின் தந்தை ஓம் பிரகாஷ், பாகிஸ்தான் மக்கள் கட்சியில் கடந்த 35 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறார். இவரும் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சவீரா கூறுகையில், “பாகிஸ்தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க விரும்புகிறேன். பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை ஒழிப்பதே முதல் முன்னுரிமை. எனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அரசியல் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.