ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெண் ஒருவர் குளிக்கும் போது செல்போனில் வீடியோ எடுத்த சம்பவத்தில் திமுக மாவட்ட பிரதிநிதி பூபாண்டியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பவுண்டு தெருவை சேர்ந்தவர் பூபாண்டியன். இவர் பஜாரில் டீக்கடை நடத்தி வருகிறார். அத்துடன், ஆளும் கட்சியான திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக உள்ளார்.
இந்த நிலையில், பூபாண்டியன் தனது நெருங்கிய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் செல்லும் வழியில் பாத்ரூம் ஒன்று இருந்துள்ளது.
அதில், பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தார். அதை வெகு நேரம் மறைந்து பார்த்துக் கொண்டிருந்த பூபாண்டியன், தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார். மேலும், பூபாண்டியனிடம் யார் நீ எதற்காக இப்படி செய்தாய் என கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், ஆவேசம் அடைந்த பூப்பாண்டியன் அந்த பெண்ணை தாக்க முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் கமுதி மகளிர் காவல் நிலையத்தில், நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் கமுதி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா, திமுக நிர்வாகி பூபாண்டியனின் செல் போனை ஆய்வு செய்தார்.
அதில், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து, திமுக நிர்வாகி பூபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.