ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவை பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாகாக்கள் குறித்த அறிவிப்பை முதல்வர் பஜன்லால் ஷர்மா வெளியிட்டிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. மாநிலத்தில் மொத்தமுள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால், அத்தொகுதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
தொடர்ந்து, டிசம்பர் 3-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 199 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, மத்திய பார்வையாளர்கள் தலைமையில் நடந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், பஜன்லால் ஷர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அதேபோல, துணை முதல்வர்களாக தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் பதவியேற்றனர். இதன் பிறகு, கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 22 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ஆனால், பதவியேற்ற 22 அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில், அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர், இலாகா தொடர்பான பரிந்துரையை முதல்வர் பஜன்லால் ஷர்மா, ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவுக்கு அனுப்பி வைத்தார். இந்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.
அந்த வகையில், முதல்வர் பஜன்லால் ஷர்மாவுக்கு உள்துறை, கலால் வரி, ஊழல் ஒழிப்பு உட்பட 8 துறைகளும், துணை முதல்வர்களில் தியா குமாரிக்கு நிதித்துறை, சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகளும், பிரேம் சந்த் பைரவாவுக்கு உயர்கல்வி, ஆயுர்வேதா, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட 6 துறைகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சரான ராஜ்யவர்தன் ரத்தோருக்கு தொழில் துறையும், முக்கிய நிர்வாகிகளான கஜேந்திர சிங் கிம்சாருக்கு சுகாதாரத் துறையும், மதன் திலாவருக்கு பள்ளிக் கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.