கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நிலக்கரி தொழிலதிபர் முகமது ஏசர் அன்சாரி. இவர், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக மானிய விலையில் வழங்கப்பட்ட நிலக்கரியை, வெளிச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இம்முறைகேடு தொடர்பாக ஏசர் அன்சாரியிடம் டிரக் டிரைவராகப் பணிபுரியும் சையத் சல்மானி உள்ளிட்டோர் மீது ஜார்க்கண்ட் மாநில போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் நிலக்கரி சுரங்கச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான குற்றப்பத்திரிகையையும் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றத்தில் போலீஸார் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் 19 டன் எடையுள்ள நிலக்கரியை சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகவும், அந்த டிரக்குகளை கையும் களவுமாகப் பிடித்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனடிப்படையில், நிலக்கரியை கள்ளச்சந்தையில் விற்று பண மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. விசாரணையில், மானிய விலை நிலக்கரியை விநியோகம் செய்ததாக ஏசர் அன்சாரி குறிப்பிட்டிருந்த 13 நிறுவனங்களும் போலியானவை என்பது தெரியவந்தது.
மேலும், மேற்கண்ட நிலக்கரியை வெளிச்சந்தையில் விற்றவகையில், ஏசர் அன்சாரி 71 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பண மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தொழிலதிபர் ஏசர் அன்சாரிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
ஆனால், பலமுறை சம்மன் அனுப்பியும் ஏசர் அன்சாரி அமலாக்கத்துறையில் ஆஜராகவில்லை. இதையடுத்து, கடந்த 16-ம் தேதி ஏசர் அன்சாரிக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொடர்ந்து, மறுநாள் ஏசர் அன்சாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.