டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது.
டெல்லியில் 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இவ்வழக்கு தொடர்பாக, அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
3 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அரசியல் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ஆகவே, 4-வது முறையாக ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்னுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமலாக்கத்துறை எனக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஏன் திடீரென எனக்கு சம்மன் அனுப்புகிறார்கள்? நான் பிரச்சாரம் செய்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில்தான், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த விரும்புவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அச்சமடைந்திருக்கிறார் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து கவுரவ் பாட்டியா கூறுகையில், “அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க விரும்பியது.
ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பயந்து போனது ஏன்? அவர் அச்சமடைந்திருக்கிறார். சிறையில் இருக்கும் குற்றவாளி யார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி. சஞ்சய் சிங்கை தொடர்ந்து கெஜ்ரிவாலும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் டி.என்.ஏ.வில் அராஜக குணம் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.