போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம், உக்ரைன் தெற்கு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 74 பேரும் உயிரிழந்து விட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.
இந்த சூழலில், இப்போரினால் ரஷ்யா படைகளின் வீரர்களில் பெரும்பகுதியினர் உயிரிழந்தும் மற்றும் காயமடைந்தும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆகவே, தற்போது போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டாலும், உக்ரைன் விடாப் பிடியாக இருக்கிறது.
இந்த நிலையில், இரு நாடுகள் இடையேயான பரஸ்பர ஒப்பந்தத்தின்படி கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
அதாவது, ரஷ்யாவின் ஐ.எல்.76 விமானம் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது, உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கி இருக்கிறது.
இந்த விமானத்தில் 65 போர்க் கைதிகளுடன் 6 விமான ஊழியர்களும் பயணித்திருக்கிறார்கள். ஆகவே, 74 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளானபோது எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதும், வலது இறக்கையில் முதலில் தீப்பற்றியது. பின்னர் விமானம் முழுவதும் தீப் பற்றி எரிகிறது. இதனிடையே, போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் குற்றம்சாட்டி இருக்கிறார்.