காஷ்மீரில் புதிய பனிப்பொழிவு தாமதமாக தொடங்கி உள்ளது. குல்மார்க், சோன்மார்க் மற்றும் தூத்பத்ரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உட்பட பெரும்பாலான உயரமான இடங்களில் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டது.
காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இனிவரும் நாட்களில் பனிப்பொழிவின் அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் மலை பகுதிகளில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், அதிகளவில் பனி பொழிவு இருக்கும். ஆனால், இந்த பருவத்தில் மலைகளில் பனிப்பொழிவு காணப்படவில்லை. இதனால், இம்முறை மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் குறைவாக இருந்தது.
தற்போது மலைப்பகுதிகளில் வானிலை மாறியுள்ளது. இமாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று பனிப்பொழிவு காணப்பட்டது. உயரமான பகுதிகளில் லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.
புதிய பனிப்பொழிவு காரணமாக, லே தேசிய நெடுஞ்சாலை உட்பட பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கு காஷ்மீரின் குப்வாரா மற்றும் பந்திபோரா, தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மற்றும் அனந்த்நாக், மத்திய காஷ்மீரில் உள்ள கந்தர்பால் மற்றும் புட்காம் உட்பட பல பகுதிகளில் அதிகாலையில் பனிப்பொழிவு தொடங்கியது. இதனால், சுற்றுலா பயணிகளும், அப்பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று ஸ்ரீநகரில் குறைந்தபட்சமாக மைனஸ் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பஹல்காமில் மைனஸ் 0.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளன. ஸ்கை ரிசார்ட் குல்மார்க் பகுதியில் குறைந்தபட்சம் மைனஸ் 3.7 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.