ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ஒதுக்கீடு வழக்கு, நில மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த இரு வழக்குகள் தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சூழலில், நில மோசடி வழக்கு தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 7 முறை சம்மன் அனுப்பியும் ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இதையடுத்து, 8-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து அமலாக்கத்துறைக்கு ஹேமந்த் சோரன் அனுப்பிய கடிதத்தில், “அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக முடியாத சூழலில் இருக்கிறேன். ஆகவே, எனது வீட்டில் வந்து விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த 20-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டுக்கு வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, மற்றொரு சம்மனை அமலாக்கத்துறை அனுப்பியது.
அதில், மீண்டும் விசாரணை நடத்தவிருப்பதால், அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு கூறியிருந்தது. எனினும், இந்த சம்மனுக்கும் பதிலளித்த ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக இயலாது. வேண்டுமானால் எனது வீட்டில் வந்து விசாரணை நடத்திக் கொள்ளுங்கள்எ ன்று கூறியிருந்தார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை அனுப்பிய பதில் கடிதத்தில், விசாரணைக்கு வரும் 29 அல்லது 31-ம் ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியை உறுதி செய்யுமாறும், அப்படி இல்லாவிட்டால், இரண்டு நாட்களில் ஏதோ ஒரு நாளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வந்து விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து டெல்லியிலுள்ள தனது வீட்டிற்குச் சென்று விட்டார், இதையறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லியிலுள்ள ஹேமந்த் சோரனின் வீட்டுக்கு விசாரணைக்கு வந்திருக்கின்றனர். மேலும், டெல்லியிலுள்ள ஜார்க்கண்ட் பவனிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள பா.ஜ.க. அலுவலகம் மற்றும் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அமலாக்கத்துறை விசாரணையைத் தொடர்ந்து, ஜாம்ஷெட்பூர், பலாமு மற்றும் கிரிதிஹ் ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த சோரனின் நிகழ்ச்சிகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.