தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 65 வயது மூதாட்டி மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் முயற்சியில் கொலை நடந்ததாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிராமத்தில் பழனி ஆண்டவர் கோவிலின் பின்புறம் ஓட்டு வீட்டில் வசித்து 65 வயமு மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார்.
மூதாட்டியின் கணவர் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் திருமணமாகி அருகில் உள்ள கிராமமான ஆவுடையானூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவ்வபோது மூதாட்டியை அவரது மகன் பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
மூதாட்டி முப்புடாதி பீடி சுற்றும் வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மூதாட்டி முப்புடாதி மாட்டுச்சாணம் கொட்டும் பகுதியில் இறந்து கிடந்ததை அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த பாவூர்சத்திரம் போலீசார் மற்றும் ஆலங்குளம் டிஎஸ்பி பர்ணபாஸ், தென்காசி ஏடிஎஸ்பி ரமேஷ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நேரில் வந்து மூதாட்டி இறந்து கிடந்ததை பார்த்த பொழுது மூதாட்டியின் உடலில் ஆடை இன்றியும் முகத்தை மட்டும் சாணத்திற்குள் திணித்தபடியும் இறந்து கிடந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆடை இன்றி முகம் சாணத்திற்குள் திணிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்ததால் யாரேனும் மூதாட்டியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்று கொலை செய்தனரா? என்கிற கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு திப்பணம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த செல்லையா மகன் ராமர் (72) என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பிடித்து விசாரனை செய்ததில் மூதாட்டியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் , மூதாட்டி மறுத்து ஆவேசமாக திட்டியதால் , ஆத்திரத்தில் கொலை செய்து சானம் கொட்டப்பட்ட குழியில் கொண்டு வந்து போட்டதாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.