ஜார்கண்டில் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த வாரம் அமலாக்கதுறையினரால் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜார்கண்ட் முக்தி மோர்சா சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரியதை தொடர்ந்து அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் சி.பி, ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பிப்ரவரி 2ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வராக அவர் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் 48 முதல் 50 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதாக ஆளும் கூட்டணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதனிடையே ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட எம்எல்ஏக்கள் நேற்று மாலை விமானம் மூலம் ராஞ்சி திரும்பினர். இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கூட்டணி தோல்வியடையும் என பாஜக தலைமைக் கொறடா பிரஞ்சி நாராயண் தெரிவித்துள்ளார்.இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.