ஜம்மு-காஷ்மீரின் பந்திபூர், பாரமுல்லா, குப்வாரா உள்ளிட்ட மாவட்டங்களில், பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் போன்ற மலைப்பிராந்திய மாநிலங்களில் பனிப்பொழிவு மற்றும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. காஷ்மீரின் சில பகுதிகளில், திரும்பும் திசையெங்கும் வெண் போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காட்சியளிக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. பனி பல அடி அளவிற்கு கொட்டி உள்ளது. முக்கிய சாலைகளில், பனி படர்ந்து காணப்படுவதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்வாரா, பந்திபூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியிருப்பதாவது, பந்திபூர், பாரமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 400 மீட்டருக்கு மேல் குறைந்த அபாய நிலை கொண்ட பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தோடா, கிஷ்த்வார், பூஞ்ச், ரம்பன் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 200 மீட்டருக்கு மேல் நடுத்தர அபாய நிலை பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், பனிச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.