பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாக மத்திய வெளியுறவுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை பிபி சௌத்ரி தலைமையிலான வெளிவிவகாரக் குழு, சர்வதேச அளவில் தீவிரவாதத்தை எதிர்த்தல் என்ற தலைப்பில், 28வது அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், இந்தியாவில் தீவிரவாதம் பெரும்பாலும் எல்லைக்கு அப்பால் இருந்து ஊக்குவிக்கப்படுகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடங்கள், பொருள் உதவி, நிதி மற்றும் பிற தளவாடங்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ வழங்குகிறது.
இந்தியா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. லஷ்கர், ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் ஆதரவுடன் இந்தியாவில் தீவிரவாத பிரச்சனை எல்லைக்கு அப்பால் இருந்து உருவானது” என்று அறிக்கை கூறப்பட்டுள்ளது.
அனைத்து தீவிரவாத அமைப்புகளின் பாதுகாப்பு புகலிடங்களை அழிப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும். உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை குழு பரிந்துரைத்தது.