கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இன்று(பிப்ரவரி 12) காலை புது டெல்லி வந்தடைந்தனர்.
கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கைது செய்தது. அவர்களை கடந்த 18 மாதங்களாக கத்தார் தடுப்பு காவலில் வைத்திருந்தது.
கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.
டெல்லி விமான நிலையம் வந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்களில் ஒருவர், “பிரதமர் மோடியின் தலையீடு இல்லாமல் நாங்கள் தாயகம் திரும்புவது சாத்தியப்பட்டிருக்காது. இந்திய அரசின் தொடர் முயற்சியினாலேயே நாங்கள் இங்கே இருக்கிறோம்” என்று தெரிவித்தார். மேலும் இந்திய கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.
கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் சவுரவ் வஷிஷ்ட், கேப்டன் அமித் நாக்பால், கமாண்டர் பூர்னேந்து திவாரி, கமாண்டர் சுகுனாகர் பாகலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, மாலுமி ராகேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.