கடந்த அ.தி.மு.க ஆட்சியில், அதாவது 2011 – 2015-ம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்ட விரோதமாக வேலை வாங்கித் தருவதாகக் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் தன்னை இணைத்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
அதன் பேரில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூன் 14 -ம் தேதி கைது செய்தது.
இதனால், அவரது தம்பி அசோக் குமார் தலைமறைவானார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்தார். இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து மீண்டும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க இந்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ந்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது.
மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரும் தலைமறைவாக உள்ள நிலையில், செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியேவிட்டால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை பிற்பகல் மீண்டும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.