வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய கபிலன் என்பவரை சி.பி.ஐ அதிரடியாகக் கைது செய்தது.
திருநெல்வேலியில் பிரபல மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், மத்திய அரசின் ஏ.பி.ஆர்.ஓ. திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி பெற்று, அதைச் செயல்படுத்தி வருகிறது.
அதாவது, புதிய தொழில்முனைவோரை வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு உருவாக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, அந்த அலுவலகத்தில் திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரி கபிலன் திடீர் ஆய்வு நடத்தினார். இதில், இந்த திட்டத்தினை அந்த நிறுவனம் முறையாகப் பயன்படுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
அப்போது, தனக்கு 5 சதவிகிதம் லஞ்சம் கொடுத்தால், வழக்குப் பதிவு செய்ய மாட்டேன் என்றும், இல்லையெனில் வழக்குப் பதிவு செய்து சிறைக்கு அனுப்ப நேரிடும் என்றும் கபிலனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மென்பொருள் நிறுவன நிர்வாகி, இது தொடர்பாக சி.பி.ஐ-யிடம் புகார் தெரிவித்துள்ளார். சி.பி.ஐ அதிகாரிகள் அறிவுரையின் பேரில், வருங்கால வைப்பு நிதி நிறுவன அதிகாரி கபிலனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதை கபிலன் வாங்கும் போது, அருகில் மறைந்திருந்த சி.பி.ஐ அதிகாரிகள், கபிலனை கைது செய்தனர். இது தொடர்பாகக் கபிலனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.