இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்காற்றும் நாடாகவும் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையின் சார்பில், ‘மிலன் 2024’ ( MILAN 2024) எனப்படும் 12-வது கடற்படை கூட்டுப்பயிற்சியின் தொடக்க விழா ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், கடற்படைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், தூதர்கள், கடற்படைத் தளபதிகள் மற்றும் கடல்சார் படைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பங்களாதேஷ், தென்கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா உட்பட 50 நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்கின்றன.
நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், போர்கள் மற்றும் மோதல்கள் இல்லாதது மட்டுமே அமைதி என்று கூறிவிட முடியாது. பகிரங்கமாக மோதிக்கொள்ளாமல், மற்றவர்களை பலவீனப்படுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வது மறைமுக மற்றும் எதிர்மறை அமைதி ஆகும்.
இதைத்தாண்டி நேர்மறையான அமைதி தான் முக்கியம். இது பாதுகாப்பு, நீதி மற்றும் ஒத்துழைப்பு போன்ற பரந்த அம்சங்களை உள்ளடக்கியது. நேர்மறையான அமைதி என்பது அனைவரின் ஒத்துழைப்புடன், பகிரப்பட்ட அமைதியாகும். இந்த உணர்வை பிரதமர் நரேந்திர மோடி மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.
ஆயுதப் படைகள் போர்களை நடத்துவதோடு மட்டுமல்லாமல், அமைதியைப் பராமரிப்பதிலும் பங்காற்றுகிறது. பேரிடர்களின் போது பல்வேறு மனிதாபிமான உதவிகளை ஆயுதப்படைகள் வழங்குகிறது. அமைதி மற்றும் பகிரப்பட்ட நன்மைக்காக போராடும் அதே வேளையில், கூட்டு நல்வாழ்வு, கடற்கொள்ளைத் தடுப்பு மற்றும் கடத்தல் தடுப்பு போன்ற எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்வதில் இருந்து கடற்படை பின்வாங்காது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்காற்றும் நாடாகவும் இந்தியா தொடர்ந்து உறுதியுடன் செயலாற்றும் என்று கூறினார்.