முந்தைய ஆட்சிக்காலத்தில் ஆயுத இறக்குமதியாளராக இருந்த இந்தியா, பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில், ஆயுத ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது, “பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு கவனம் செலுத்துகிறது.
இறக்குமதி செய்யப்படும் இராணுவத் தளவாடங்களைக் கொண்டு எந்தவொரு இராணுவமும் தனது நாட்டை பாதுகாக்க முடியாது. பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இந்தியாவுக்கு முக்கியமானது. பாதுகாப்புத் தளவாட உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இது தற்சார்புக்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கி உள்ளன.
உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நவீன இராணுவத் தளவாடங்கள் தயாரிக்கப்படுவது மட்டுமின்றி, நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்து வருகிறது.
முன்பு, இந்தியா ஒரு ஆயுத இறக்குமதியாளராக இருந்தது. ஆனால், இன்று, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், ஆயுதம் ஏற்றுமதி செய்யும் முதல் 25 நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. தற்போது பாதுகாப்பு ஏற்றுமதி ரூ.16 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது. 2028-29 ஆம் ஆண்டில், வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும். பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ரூ.50 ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.6.21 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.