நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவில் சிறுபான்மை இன தலைவர்கள் அதிக அளவில் சேர்ந்து வருகின்றனர். இதற்கான காரணம் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
கடந்த 18 ஆம் தேதி நாக்பூரில் உள்ள தாஜ்பாக் தர்காவின் ‘சஜ்ஜாதா நஷின்’ (பாதுகாவலர்) சையத் தலேஃப் தாஜி, பாஜகவில் இணைந்தார். இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் உதவியாளர் சையத் ஜாஃபர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இதேபோல் பாஜகவின் வேட்பாளர் பட்டியலிலும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரத்தின் வேட்பாளராக காலிகட் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அப்துல் சலாமுக்கு இடம் கிடைத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் பார்க்கும்போது, முஸ்லிம்கள் வளர்ச்சியடைய பாஜகவால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்துள்ளனர் என்கிறார் பாஜக சிறுபான்மை மோர்ச்சாவின் தேசியத் தலைவர் ஜமால் சித்திக்.
கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 3 முக்கிய பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோயில், சட்டப்பிரிவு 370 ரத்து மற்றும் குடியுரிமை திருத்த சட்டம். இந்த மூன்று செயல்களும், எதிர்க்கட்சிகளால் முஸ்லீம்களுக்கு எதிரானவை என்று விமர்சிக்கப்பட்டாலும், அதனை அம்மத மக்கள் ஏற்றுக்கொள்வதையே இது காட்டுகிறது. மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 65க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 30% வாக்காளர்களாக உள்ளனர் என்பதை பாஜக உணர்ந்துள்ளது.
இதேபோல், கிறிஸ்தவ சமூகத்திற்கும் பாஜக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் சமயத்தில் டெல்லியில் பல்வேறு பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு பிரதமர் மோடி தனது வீட்டில் விருந்தளித்தார். மேலும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு அதிக நலத்திட்டங்கள்,சலுகை மற்றும் உரிய பிரதிநிதித்துவத்தை பாஜக அளித்து வருகிறது.
கேரளாவில் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் மறைமாவட்டச் செயலர் தலைமையில் 47 கிறிஸ்தவ குடும்பங்கள் பாஜகவில் இணைந்துள்ளன. இதேபோல் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி மகன் அனில் ஆண்டனிக்கு பத்தனம்திட்டா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
“சப்கா சாத் சப்கா விகாஸ்” எல்லாருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வோம் என்ற கொள்கையுடன் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து மதத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம், உரிய சலுகை வழங்கப்படுவதன் மூலம் இதனை மோடி அரசு உறுதி செய்துள்ளது என்றால் அது மிகையில்லை.