நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார்.
நாளை மாலை 3.45 மணிக்கு மதுரை வரும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் தேனி செல்கிறார். அங்கு போட்டியிடும் அமமுக வேட்பாளர் தினகரனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மதுரை திரும்பும் அவர் 6,45 மணி அளவில் பழங்காநத்தம் சந்திப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை அறிமுகப்படுத்தி பேசுகிறார். இரவு பசுமலை கேட் வே ஓட்டலில் தங்குகிறார்.
ஏப்ரல் 5-ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யும் அவர், ஹெலிகாப்டரில் தென்காசி செல்கிறார். அங்கு போட்டியிடும் வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதனைத்தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அமைச்சர் அமித் ஷா, அங்கு போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு திரட்டுகிறார். தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இடங்களிலும் அவர் வாகனப்பேரணியில் பங்கேற்கிறார்.