கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பா.ஜ.க தலைவரும், அந்தத் தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை இன்று வெளியிட்டார். அதில், ‘என் கனவு நமது கோவை’ என்ற பெயரில் 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற வாசகத்துடன், 250 மக்கள் மருந்தகங்கள், முதியோருக்கு மருத்துவ மையம், 3 உணவு வங்கிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,
* தமிழகத்தில் 2வது ஐ.ஐ.எம்., கோவையில் நிறுவப்படும்.
* கோவையில் என்.ஐ.ஏ., மற்றும் என்.சி.பி., கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.
* கோவை தொகுதியில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
* நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.
* காமராஜர் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் 3 உணவகம் நிறுவப்படும்.
* கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.
* கோவை – கன்னியாகுமரி, கோவை – திருவனந்தபுரம் (கொச்சி வழி) புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
* கோவை – திருச்சி சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படும்.
* கோவை – கரூர் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* திருச்ச – அவிநாசி சாலைக்கு இடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை.
* குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.
* கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா அமைக்கப்படும்.
* ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்
* உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும்.
* கோவையில் ‘கேலோ இந்தியா’ திட்டம் மூலம் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
* மத்திய அரசின் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் கோவையின் பழமையான கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.
* சர்வதேச தரத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம் நிறுவப்படும்.
* சுற்றுலா செல்லும் இளைஞர்களுக்காக இளைஞர் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.
இத்துடன் 2026ல் தமிழகத்தில் பாஜக, ஆட்சி அமையும்போது நிறைவேற்ற உள்ள திட்டங்கள் பற்றிய வாக்குறுதியையும் அண்ணாமலை வெளியிட்டார்.
அதில், ”பிரதமரின் விவசாய கவுரவ நிதி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும், காவல்துறையினரின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்; வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படும், இந்து அறநிலையத்துறையின் கோயில்கள் மீதான அதிகாரம் மக்களிடம் வழங்கப்படும்” ஆகிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.