பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், 11 அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், அண்டை நாடுகள் மட்டுமின்றி, அந்நாட்டு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த, பேருந்தை ஆயுதமேந்திய தீவிரவாதிகள் சிலர் வழிமறித்தனர். துப்பாக்கி முனையில் பேருந்தில் இருந்த 9 பயணிகளை கடத்தி சென்றனர்.
பின்னர், கடத்தி செல்லப்பட்ட 9 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அவர்களின் உடல்கள் அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது குறித்து அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.