சிவகாசியில் இடி மின்னல் தாக்கி பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
சிவகாசி அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலைகள் சிவகாசியில் உள்ளது. இவருக்கு உதவியாக அவரது மகன் வேல் ஈஸ்வரன் என்ற சின்ன ஈஸ்வரன் (வயது37) என்பவர் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள பூவநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது வேல் ஈஸ்வரன் பஸ் நிறுத்தத்தில் ஒதுங்கினார்.
அப்போது அவருடன் பெரியகுளத்து பட்டியைச் சேர்ந்த ராமர் மகன் முருகேஸ்வரன் (42), அவரது மகன் விக்னேஷ் ( 13), வடபட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சேவியர்ராஜ் (38 ) ஆகிய 4 பேரும் பஸ் நிறுத்தத்தில் மழைக்காக ஒதுங்கி நின்றனர்.
அப்போது அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே வேல் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் முருகேஸ்வரன், விக்னேஷ், சேவியர்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருத்தங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இடி மின்னல் தாக்கி இறந்த வேல் ஈஸ்வரன் உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.