மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து கட்டத் தேர்தலில் பாஜகவுக்கு 310 இடங்கள் கிடைத்து விட்டதாக தெரிவித்தார். மேலும், மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி 30 தொகுதிகளைப் பெறுவார் என்றும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி துண்டு துண்டாக உடைந்துவிடும் என்றும் அமித் ஷா கூறினார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அரசியல் வன்முறை அங்கு ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக கூறிய அவர், உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் 200 பேர் படுகொலை செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிவு வெளியான பிறகும், துணை ராணுவப் படைகளை மேற்கு வங்கத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.