போக்குவரத்துத்துறை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் தொடர்ந்த நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தில் ஏறிய காவலர் ஒருவர் டிக்கெட் எடுக்க மறுப்பு தெரிவித்தார். இதனால் பேருந்து நடத்துநருக்கும், காவலருக்கும் இடையே மோதல் முற்றியது. இதனையடுத்து காவல்துறை அதிகாரிகளுக்கு வாரண்ட்டு இருந்தால் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ள முடியும் என போக்குவரத்துத் துறை விளக்கமளித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 23ம் தேதி முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போக்குவரத்து விதியை மீறிய அரசு பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதனால் காவல்துறைக்கும், போக்குவரத்துத் துறைக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம் ஒன்றை எழுதியது.
இதனையடுத்து, பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் உள்துறை செயலாளர் அமுதாவை, போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ஆலோசனைக்கு பிறகு பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவலளித்துள்ளனர்.