சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள மருந்தகத்தின் கிடங்கிலிருந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
தாய்ப்பாலை வணிக ரீதியில் விற்பனை செய்ய மத்திய உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
சென்னையில் தாய்ப்பால் விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை 18 குழுக்கள் அமைத்துள்ளது.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள், மருந்து கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, இந்த ஆய்வில் பாட்டில்களில் அடைத்தும், பவுடர் வடிவிலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தாய்ப்பாலை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சதீஷ்குமார், கைப்பற்றப்பட்ட தாய்ப்பால் அனைத்தும் கர்நாடகாவில் உள்ள பெரு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பெரு நிறுவனத்திற்கும், மருந்தகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.