முறையாக தண்ணீர் தரப்படுவதில்லை எனக்கூறிய பொதுமக்கள் வேலூர் மாவட்டம், சதுப்பேரி சாலையில் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகராட்சியின் கஸ்பா சித்தத்தா நகரில் ஏராளமான மக்கள் வசித்து வரும் நிலையில், இப்பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பணம் கொடுத்து தண்ணீர் வாங்குவதாகவும், இது குறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சதுப்பேரிக்கு செல்லும் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.