உத்தரபிரதேச மாநிலத்துக்குப் பின் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை உடைய மகாராஷ்டிராவில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி பார்க்கலாம்..!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் நிலையற்ற அரசியலைக் கொண்ட ஒரு மாநிலம் எது என்றால் அது மகாராஷ்டிரா தான்.
7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தல் , 48 தொகுதிகளை உடைய மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக நடைபெற்றது.
பரபரப்பான அரசியல் சூழலால், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டாக உடைந்தன . அதனால்,மகாராஷ்டிராவில் மூன்று விதமான கூட்டணிகள் ஏற்பட்டன. மூன்று விதமான போட்டிகள் நடந்தன. அதாவது பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் சரத்பவாருக்கும் அஜித் பவாருக்கும், ஏக்நாத் ஷிண்டே வுக்கும் உத்தவ் தாக்கரே க்கும் தான் தேர்தலில் போட்டி இருந்தன.
பாஜக ,ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா ,அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் , ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஜா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியில் மஹாயுத்தி என நின்றன.
அதில், போட்டியிட்ட 28 தொகுதிகளில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 14 இடங்களில் போட்டி இட்ட ஏக்நாத் ஷிண்டே சிவசேனா 7 இடங்களிலும், அஜித் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் 5 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தைக் கைப் பற்றியிருக்கிறது.
இன்னொரு புறம் காங்கிரஸ் , உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பாவரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மகா ஆகாதி என ஒரு கூட்டணியில் நின்றன. அதில் 21 இடங்களில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே சிவசேனா 9 இடங்ககளில் வெற்றி பெற்றுள்ளது.
17 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றுளளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் போட்டியிட்டு அதில் 8 இடங்களைக் கைப் பற்றியுள்ளது.
2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 41 இடங்களை வென்றிருந்த மாநிலத்தில் இப்போது பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மும்பையில் உள்ள ஆறு இடங்களிலும் பாஜக கூட்டணியே வெற்றி பெற்றது . ஆனால் இம்முறை வடக்கு மும்பையில் மட்டுமே பாஜகவின் வேட்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வெற்றி பெற்றுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே சிவசேனா மும்பை வடமேற்கு தொகுதியை வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். மீதி இடங்களை காங்கிரசும் உத்தவ் தாக்கரே வும் கைப் பற்றினர்.
சிவசேனா கட்சி இரண்டாக உடைந்ததற்கு பாஜக தான் காரணம் என்ற எண்ணமும், உத்தவ் தாக்கரே மேல் ஏற்பட்ட அனுதாபமும் மும்பையில் பாஜக கூட்டணி வாக்குகள் பெறமுடியாமல் போனதற்கு காரணமாக பார்க்கப் படுகிறது.
அடுத்ததாக, மராத்வாடாவை பொருத்தவரை இடஒதுக்கீடு விவகாரத்தில் மராத்தியர்களின் சீற்றத்துக்கு, பாஜக பலியாகி உள்ளது என்றே பார்க்க முடிகிறது.
நாந்தேட், பீட், ஜல்னா, லத்தூர், ஔரங்காபாத், ஹிங்கோலி, உஸ்மானாபாத் மற்றும் பர்பானி ஆகிய 8 தொகுதிகளில் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 4 இடங்களில் பாஜகவும் 3 இடங்களில் சிவசேனாவும் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால் இந்த முறை இருப்பினும், இந்த முறை, உத்தவ் தாக்கரே சிவசேனா மூன்று இடங்களையும், காங்கிரஸ் மூன்று இடங்களையும் கைப்பற்றி விட்டது. இது பாஜக கூட்டணிக்கு ஒரு பெரிய இழப்பாக போய் விட்டது.
அடுத்து , கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா தொகுதிகள் ஒரு காலத்தில் காங்கிரஸ் கோட்டை எனச் சொல்லப்படும். 2019 ஆம் ஆண்டு பாஜக சிவசேனா கூட்டணி , விதர்பாவில் உள்ள 10 இடங்களில் ஆளுக்கு நான்கு நான்கு என 8 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது.
ஆனால் இந்த தேர்தலில் , இந்த தொகுதிகளிலும் பாஜகவுக்குப் பின்னடைவே.நாக்பூரில் போட்டியிட்ட மத்திய மைச்சர் நிதின் கட்கரி கூட சென்ற முறையை விட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று இருக்கிறார்.
மொத்தமாக பார்க்கும் போது , ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் இரண்டு பேருமே மகாராஷ்டிராவில் பாஜகவின் மக்கள் செல்வாக்கை வெகுவாக குறைத்து விட்டார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் விரைவில் மகாராஷ்டிராவில் சட்ட மன்ற தேர்தல் வர இருக்கிறது. பாஜக இழந்ததை மீட்க கடுமையாக களப்பணி ஆற்றவேண்டும் என்கிறார்கள் பாஜக தொண்டர்கள்.