பழங்குடி இனத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் மோகன் சரண் மாஜி , ஒடிசாவின் முதல் பாஜக முதல்வராக ஆகி இருக்கிறார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தள ஆட்சிக்கு, சமீபத்தில் நடந்து முடித்த தேர்தலில் பாஜக முற்றுப் புள்ளி வைத்தது.
மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 78 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக தனி பெரும்பான்மையுடன் ஒடிசாவில் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக 4 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மோகன் சரண் மாஜியை ஒருமனதாக தேர்வு செய்தனர். துணைமுதல்வர்களாக கேவி சிங் மற்றும் பிரவாதி பரிதா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
சராசரி வீட்டுக் காவலாளியின் மகனாக, ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் உள்ள ரெய்காலா கிராமத்தில் பிறந்த மோகன் சரண் மாஜி, “மாற்றத்திற்காக வாக்களித்த நான்கரை கோடி ஒடிய மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பூரி ஜகந்நாதரின் ஆசீர்வாதத்தால், இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.”
மேலும் , பதவி ஏற்பு விழாவின் முதல் அழைப்பிதழ், பூரி ஜகந்நாதருக்கு வைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
இளங்கலை பட்டப்படிப்பும், சட்ட மேற்படிப்பும் படித்துள்ள ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, இளம் வயதிலேயே, சமூக அர்ப்பணிப்புடன் பழங்குடியின மக்களுக்கு சேவைகள் புரிந்து வந்தார்.
1997ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை பஞ்சாயத்து தலைவராக பணியாற்றிய இவர், பாஜகவின் ஒடிசா பழங்குடியினர் பிரிவின் பொதுச் செயலாளராகவும், கட்சியின் சட்டமன்ற கொறடாவாகவும் பதவி வகித்துள்ளார். பொதுக்கணக்கு குழு தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
2000ம் ஆண்டில் முதன்முறையாக, கியோஞ்சர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, தொடர்ந்து நான்காவது முறையாக இம்முறை வெற்றி பெற்றிருக்கிறார்.
ஒடிசாவில் வலுவான பழங்குடியினரின் நியாயமான குரலாக இருக்கும் ஒடிசாவின் முதல்வராக அறிவிக்கப்பட்டதை அறிந்ததும், ரெய்காலா கிராமத்தில் உள்ள ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியின் வீடு மக்களால் நிரம்பி வழிந்தது.
தனது கணவருக்கு, முதல்வர் பதவி அளித்த பாஜக கட்சியின் முடிவு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாவும் இருக்கிறது என்று தெரிவித்துள்ள முதல்வரின் மனைவி பிரியங்கா, அவர் மக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்து, பாஜகவுக்காக மிகுந்த நேர்மையுடன் பணியாற்றுவதை கண்கூடாக பார்த்திருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
சந்தாலி சமூகத்தைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, முதல்வராக உயர்ந்திருக்கும் மோகன் சரண் மாஜி , இதுவரை எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர் என்பதே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
எல்லோரையும் அனுசரித்து, ஒருங்கிணைந்து கொண்டு செல்லும் திறமைக்காகவே, கடந்த ஒடிசா சட்டமன்ற கொறடாவாக மோகன் சரண் மாஜியை பாஜக தேசிய தலைமை நியமித்தது என்று சொல்லப்படுகிறது.
மேலும் மோகன் சரண் மாஜியின் நேர்மையான அரசியலும், ஊழலுக்கு எதிரான அவரது நிலைப்பாடும் பாஜகவினர் மட்டுமின்றி ஒடிசா மக்களுமே நன்கு அறிவார்கள்.
பிஜு ஜனதா தளத்தின்,ஒரே பெண் அமைச்சரான பெண் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரமிளா மல்லிக் மீது 700 கோடி பருப்பு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
2023 அம ஆண்டு , இந்த ஊழலுக்கு எதிராக , சபாநாயகர் மீது வேகவைக்காத பருப்பை வீசியதாகக் கூறி ஒடிசா சட்டசபையில் இருந்து பாஜக சட்டமன்ற கொறடா மோகன் சரண் மாஜி அவையில் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அப்போது , சபாநாயகர் மீது ‘பருப்பு வீசாததால் நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றது என்று கூறியதோடு தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறும் சபாநாயகருக்கும் ஆளும் கட்சிக்கும் சவால் விடுத்திருந்தார் மோகன் சரண் மாஜி.
ஏற்கெனவே , பருப்பை சபா நாயகர் மீது வீசக்கூடாது என்று தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறித்தியவர் தான் இந்த மோகன் சரண் மாஜி. இருப்பினும், 700 கோடி ரூபாய் பருப்பு ஊழல் பற்றி ஒரு கடுமையான நியாயமான எதிர்ப்பை அவையில் முன்வைத்தார்.
பருப்பு ஊழலில் உண்மையின் அடிப்படையிலான ஆதாரங்களை வைத்து நவீன் பட்நாயக் அரசைத் திக்குமுக்காட வைத்தார் என்று தான் அப்போது பலராலும் சொல்லப் பட்டது.
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிஜு ஜனதா தள அமைச்சர் பிரமிளா மல்லிக் பதவி விலகும் வரை , சட்டமன்றத்திலும், பொது வெளியிலும், இந்த பிரச்சனையை சரியாக முன்னெடுத்து சென்றதல் மோகன் சரண் மாஜியின் பங்கு மிக முக்கியமானது.
மேலும், தனது நிர்வாகத் திறமையாலும், சிரத்தையான மக்கள் பணிகளாலும் ஒடிசா சட்டமன்றத்துக்குப் பெருமை தேடி தந்தவர் என்று எதிர்கட்சிகளாலும் பாராட்டப் பட்ட இவர், பாஜக கட்சியில் சேர்ந்தது முதல் இன்றுவரை விசுவாசமான பாஜக உறுப்பினராகவே அறியப்படுகிறார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மையான அரசியல் பணியாற்றிவரும் ஒருவர், மாநிலத்தின் முதல்வராக ஆகியிருப்பது, ஒடிசாவின் பழங்குடியின மக்களுக்கு மட்டுமின்றி ஒடிசாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் மேம்படுத்துவார் என்று நம்பப் படுகிறது.
மோகன் சரண் மாஜியை முதல்வராக தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் , பாஜகவுக்கு பழங்குடியின மக்களிடம் ஆதரவு பெருகி யிருக்கிறது.
விரைவில் வரவிருக்கிற ஜார்க்கண்ட் தேர்தலில் பழங்குடியின சமூகத்தின் வாக்குகள் பாஜகவுக்கு அதிகஅளவில் கிடைக்கும் என்றும், அதற்கு ஒடிசாவின் புதிய முதல்வரான மோகன் சரண் மாஜி முக்கிய உந்து சக்தியாக இருப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். சென்றடைய பாஜக முயற்சிக்கிறது, இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது.