தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைவதையடுத்து, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடலில் மீன்வளத்தை காக்கும் நோக்கில் ஆண்டுதோறும் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த ஏப்ரல் 14-ம் தேதி முதல், வங்கக்கடல், பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
பல்லாயிரக்கணக்கான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டன. இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், உள்நாட்டிலும் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
இதனிடையே விசைப்படகுகளில் பழுது நீக்கும் பராமரிப்புப் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையடுத்து, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்கு செல்லும் வகையில் மீன்பிடி உபகரணங்களை சீரமைத்ததோடு ஐஸ், டீசல் உள்ளிட்டவற்றை படகுகளில் ஏற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.