விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது என்பதாலேயே, அத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து, மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
“ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்தது. ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பது போன்று, இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். தேர்தல் ஆணையம் அதை கண்டு கொள்ளவில்லை. காவல்துறை, அரசு அதிகாரிகள் இதற்கு துணை நிற்கின்றனர். அமைச்சர்கள் அங்கே முகாமிட்டு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடு புரிந்தனர்.
தி.மு.க. ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கிறோம். மக்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் எனத் தேர்தலைப் பிரித்து பார்த்து வாக்களிக்கின்றனர் என அவர் கூறினார்.
தேர்தல் ஆணையமும், காவல்துறையினரும் திமுகவுக்கு துணையாக இருப்பதாகவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடைபெற்றதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.