18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக புதிய சபாநாயகர் வரும் 26ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில் அடுத்த சபாநாயகர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்,பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார். கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரதமர் மோடி மற்றும் 71 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
உள்துறை, ராணுவம், நிதி, வெளியுறவு, சாலை மற்றும் ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சென்ற முறை வைத்திருந்த அதே அமைச்சர்களுக்குத் தரப்பட்டுள்ளன.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டு தேர்தலைப் போலல்லாமல், இந்த முறை 240 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. 272 என்ற பெரும்பான்மை எண்ணிக்கைக்கு 32 தொகுதிகள் குறைவாக இருப்பதால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கிறது.
ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவை முறையே 16 மற்றும் 12 இடங்களில் வெற்றி பெற்று, மோடி ரசில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. இந்நிலையில், மிகவும் முக்கியமானதாக கருதப்படும் சபாநாயகர் பதவி யாருக்கு என்பதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை.
சபாநாயகர் வேட்பாளரை ஒன்றுபட்டு முடிவு செய்ய வேண்டும் என்று தெலுங்கு தேச கட்சி தலைவர்கள் கூறியுள்ள நிலையில், பாஜக பரிந்துரை செய்யும் சபாநாயகர் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர் KC தியாகி தெரிவித்துள்ளார்.
சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 93வது முதல் பிரிவுகள் 96 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. சபாநாயகர் மக்களவையின் தலைமை அதிகாரியாகவும், உச்சபட்ச அதிகாரம் உள்ளவராகவும் இருப்பார்.
இதற்கிடையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட தற்காலிக சபாநாயகர் ஒருவரை குடியரசு தலைவர் நியமிப்பார். இதைத் தொடர்ந்து, மக்களவை தனிப் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகளின் அடிப்படையில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப் படுவார்.
மக்களவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு குறிப்பிட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்றாலும், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிகள் பற்றிய முழுமையான புரிதல் இருக்கவேண்டும் அதுதான், மக்களவை நடைமுறைகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கும் மக்களவையின் ஒழுங்கை பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று அரசியல் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சபாநாயகர் தலைமையில் நடைபெறும் மக்களவை, சபாநாயகர் இல்லாத நேரத்தில், துணை சபாநாயகர் அவையை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்.
சபாநாயகர் பணி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. மக்களவைக்குள் உறுப்பினர்களின் ஒழுக்கத்தைப் பேணுவதில் சபாநாயகரே முக்கியப் பங்காற்ற வேண்டி இருக்கிறது.
ஏற்கெனவே வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி, அவையை சுமூகமாக நடத்துவதும், அவை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும், அவை விதிகள் ஒழுங்காக பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதும், சபாநாயகரின் முக்கிய பணிகளாகும்.
உறுப்பினர்களில் யார் எப்போது பேச வேண்டும் என்பதை தீர்மானிப்பதன் மூலம் விவாதங்களை முறையாக வழிநடத்துவதுடன், ஒரு அமர்வின்போது எந்தெந்த கேள்விகளை எப்போது, எப்போது எழுப்ப வேண்டும் என்பதையும், சபாநாயகர் தீர்மானிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டான சூழ்நிலையில் முடிவெடுக்க மக்களவையில் வாக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு.
ஒரு வாக்கெடுப்பில், எதிர் எதிர் இரு தரப்பும் சம எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெறும் போது மட்டுமே சபாநாயகரின் வாக்குரிமை பயன்படுத்தப்படுகிறது. சபாநாயகரின் பாரபட்சமற்ற தன்மைக்கு இது ஒன்றே சான்று.
நம்பிக்கைத் தீர்மானம், தணிக்கைத் தீர்மானம் போன்றவற்றின் மூலம் பல்வேறு நடைமுறைகளை அனுமதிக்கும் அதிகாரத்துடன், எதிர்க்கட்சித் தலைவருக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரமும் மக்களவை சபாநாயகருக்கு இருக்கிறது
நாடாளுமன்றத்தின் பல்வேறு செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், அவற்றை மதிப்பீடு செய்யவும் மற்றும் அந்த பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யவும் மக்களவையில் பல்வேறு நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த குழுக்களுக்குத் தலைவர்களை நியமிக்கும் அதிகாரமும் சபாநாயகருக்கு இருக்கிறது.
இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின் கீழ், சபாநாயகருக்கு கட்டுக்கடங்காத நடத்தையை தண்டிக்கவும் மற்றும் கட்சி விலகல் காரணமாக உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்போது 18வது மக்களவையின் புதிய சபாநாயகராக யார் வருவார்கள் என்ற யூகங்கள் வருகின்றன. சபாநாயகர் பதவிக்கு தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி.ராமராவின் மகளான தகுபதி புரந்தேஸ்வரியின் பெயர் யூகிக்கப்படுகிறது.
ஆந்திர மாநில பாஜக தலைவராக இருக்கும் புரந்தேஸ்வரி 2009ம் ஆண்டு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திலும், 2012ம் ஆண்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில், ஆந்திராவின் ராஜமுந்திரி தொகுதியில் 2.3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற புரந்தேஸ்வரி மக்களவை சபாநாயகராவா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.