குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோயில் ஆகிய மண்டலங்களில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பெறுவதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பது உழைப்புச் சுரண்டலை ஊக்குவிக்கும் என்று உயர்நீதிமன்றம் விமர்சித்த பின்பும் அதனை அரசு பின்பற்ற நினைப்பது சமூக நீதிக்கு எதிரான நடைமுறை எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆள்குத்தகை முறையை தமிழக அரசு திணித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் நியமனங்களில் ஓய்வூதியம், பணிக்கொடை மட்டுமல்லாது எந்த வகையான இட ஒதுக்கீடும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு வழங்கப்படாது. இது மிகப்பெரிய அநீதியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை ஒற்றை ஆணியில் பறித்திருக்கும் திமுகவுக்கு சமூகநீதி குறித்தும், தொழிலாளர்கள் உரிமை குறித்தும் பேச எந்த தகுதியும் இல்லை எனவும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
மேலும், சமூகநீதிக்கும், தொழிலாளர் உரிமைக்கும் எதிரான குத்தகை முறை நியமனத்தை அரசு கைவிடவில்லை என்றால் கடுமையான போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ள அவர், குத்தகை முறையில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை நியமிப்பதை அரசு கைவிட வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.