கள்ளச்சாரய மரணங்கள் குறித்த அறிக்கை மூன்று மாதங்களுக்குள் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என ஒரு நபர் ஆணையத்தின் நீதிபதி கோகுல்தாஸ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு நபர் நீதிபதி ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது.
இந்நிலையில், நீதிபதி கோகுல்தாஸ் தனது விசாரணையைத் தொடங்கினார். முதலில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து அவர் விசாரணை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனை மற்றும் கிராமத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.
மேலும், ஆணையம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.