கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் இன்டர்போல் போலீஸார் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக உதகை மாவட்ட நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் பங்களாவில், கடந்த 2017ஆம் ஆண்டு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்தது.
பின்னர் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.
இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவ்வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் வழக்கறிஞர் ஷாஜகான் வாதாடினார்.
அப்போது வழக்கில் தொடர்புடைய கனகராஜ் உயிர் இழப்பதற்கு முன் அவரது செல்போனிற்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைத்தது யார் என்பது குறித்து இன்டர் போல் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக நீதிபதியிடம் அவர் தெரிவித்தார்.
இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.