செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட புஷ்பக் ஏவுகலன் 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஆதித்யா எல் 1, சந்திரயான் 3 ஆகிய விண்கலன்களை விண்ணில் செலுத்தி விண்வெளித் துறையில் சாதனை படைத்துள்ள இஸ்ரோ, மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டது.
செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த விண்ணிற்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் திரும்பி வராமல் அதன் பாகங்கள் கடலில் விழுந்து விடும் நிலையில், மீதியுள்ள பாகங்கள் குப்பைகளாக பூழியை சுற்றிவர தொடங்கி விடுகிறது.
இந்த குப்பைகள் ஏற்கெனவே பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மீது மோதாமல் தடுக்கும் வகையில், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஆர்எல்வி புஷ்பக் என பெயரியிடப்பட்டுள்ள இந்த ஏவுகலன் ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா பகுதியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலை 7.10 மணிக்கு 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.