மக்களவை சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பர்த்ருஹரி மஹதாப், புதிய எம்பிக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே மக்களவை சபாநாயகர் பதவிக்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லா போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வகையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பிரதமர் மோடியை ஓம் பிர்லா இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.