கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். என்ன காரணம் ? பின்னணி என்ன ? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான்- உலகின் ஐந்தாவது பெரிய மக்கள்தொகை உள்ள நாடாகும். உலகில் இளைஞர்கள் அதிகம் வாழும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். 240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் பாகிஸ்தான் இளைஞர்கள் எண்ணிக்கையே அதிகம். பாகிஸ்தானில், மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு 30 வயதுக்கும் உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் 2022ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை கடந்த ஆண்டு, 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
பாகிஸ்தான் இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு உள் நாட்டில் எங்கும் வேலை வாய்ப்புக்கள் கிடைப்பது இல்லை. வருமானத்துக்கு வழியில்லாததால், தங்கள் அன்றாடச் செலவுகளை நிர்வகிக்க முடியாமல், பாகிஸ்தான் இளைஞர்கள் மிகவும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, பாகிஸ்தானை விட்டு வெளியேறினால் போதும் என்ற நிலைக்கு பாகிஸ்தான் இளைஞர்கள் வந்துவிட்டார்கள்.
பாகிஸ்தான் அரசின் குடியேற்ற மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தகவலின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் 8,00,000 பாகிஸ்தானிய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இது, 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிப் படிப்போ , தனித்த திறமையோ இல்லாத இளைஞர்கள் உள்ளூரில் இருக்க வேண்டிய கட்டாயத்தில், பட்டம் பெற்ற இளைஞர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேறி வருகிறார்கள். நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் கூட, 90 சதவீத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று தெரிய வருகிறது.
எனவே, பாகிஸ்தானிய இளைஞர்கள் மத்திய கிழக்குநாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்கிறார்கள்.
முன்னதாக, சென்ற ஆண்டு பாகிஸ்தானில் பணவீக்கம் 30 சதவீதமாக இருந்தது . இந்த ஆண்டு பணவீக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே நேரத்தில் ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக பாகிஸ்தானிய ரூபாய் 300 ரூபாய் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டது. இது பாகிஸ்தானில் வரலாறு காணாத ரூபாயின் வீழ்ச்சியாகும்.
திவாலான நிலையில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் அரசு கடந்த ஆண்டு, சர்வதேச நிதி ஆணையத்திடம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் பெற்றது. ஆனாலும் நிலைமை இன்னும் சரியாக வில்லை.
பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகரான ( Rana Ihsan Afzal Khan ) ரானா இஹ்சான் அப்சல் கான், நாட்டின் குறைந்த பொருளாதார வளர்ச்சி சிக்கலை ஏற்படுத்துகிறது என்றும் இது நாட்டுக்கு ஆபத்தான அறிகுறி என்றும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நாட்டை விட்டு வெளியேறுவது கடினமான முடிவாகும், ஆனால் பாகிஸ்தானில் இருப்பது வாழ்க்கையை இன்னும் கடினமாக்கும் என்பது பாகிஸ்தான் இளைஞர்களின் கருத்தாக உள்ளது.